Articles

kanthasasti viratham

ஐப்பசி வளர்பிறை பிரதமையில் துவங்கி, சஷ்டி வரை ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படும் கந்த சஷ்டி விரதம் அளவிடற்கரிய பலன்களை அளிக்கவல்லது. இதை வசிஷ்ட மாமுனிவரே கூறியுள்ளார். அவரது இந்தக் கூற்றை ஏற்ற தேவகுருவான பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி கந்த சஷ்டி விரதத்தை மேற்கொண்டு, வலன் என்ற அசுரனை அழித்தான் இந்திரன்.

“உபவாசம்’ என்றால் “விரதமிருந்து கடவுளோடு வாசம் செய்வது’ என்று பொருள். எனவே உபவாச நாட்களில் மனம், மொழி, செயல்களால் கடவுளை இடையறாமல் வழிபட வேண்டும்.

மஹா சஷ்டி

ஐப்பசி மாத சஷ்டி, சூரசம்ஹாரம் நடைபெற்ற திருநாள். ஆகவே இந்த சஷ்டியை “மஹா சஷ்டி’ என்கின்றனர். இந்த நாளில் இருக்கும் விரதம், கந்தனது அடியார்களை அவனுடைய அருள் வெள்ளத்தில் ஆனந்தமாக மிதக்க வைக்கும்.

ஆறு நாள்களும் விரதமிருக்க முடியாதவர்கள் ஆறாம் நாளான சஷ்டியன்று மட்டும் விரதமிருக்கலாம். ஆறாம் நாள் இரவில் உறங்கக்கூடாது; பகலிலும் உறக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

கந்த சஷ்டி விரதம் நீர் விரதம், பால் விரதம், மெüன விரதம் என்று மூன்று வகைப்படும்.

விரத காலத்தில் சோர்வாக இருந்தால், புனித தீர்த்தம் அல்லது சாதாரண நீரை மட்டும் பருகுவது நீர் விரதம்.

பாலை மட்டும் பருகுவது பால் விரதம்.

உண்ணா நோன்புடன் மெüனமாக இருந்து மனதுக்குள் முருகனின் திருப்பெயர்களையும் உச்சரித்துக் கொண்டிருப்பது மெüன விரதம்.

ஒரு வகையில் பேச்சும் அடங்கி, மனமும் ஒடுங்குவதே மெüன விரதம். விரத வகைகளில் இது உச்ச நிலைக் கடுமையுடையது. மெüன விரதத்தின்போது மனதினை அடக்குவது மிகவும் புண்ணியம்.

ஆறு நாள் முழுவதும் மேற்கூறியபடி விரதமிருந்து ஏழாம் நாளன்று நீராடி, முருகனை வழிபட்டு வெல்லமும், பச்சைப் பயறும் கலந்து வேகவைத்து உண்டு விரதத்தை முடிக்கலாம். பகலுணவு உட்கொண்ட பிறகு உறங்கக்கூடாது. அந்திக்குப் பின் விரைவில் உறங்கச் செல்லலாம்.

முருகன் வழிபாடு

ஆறு நாள் சஷ்டி விரதத்தின் போது முருகனைக் கண்ணார, வாயார, மனமார, உயிர் குளிர வழிபட வேண்டும். விரதத்திற்குரிய அந்த ஆறு நாள்களும் கந்த புராணத்தை முழுமையாகப் படிக்கலாம். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம் முதலான கவச நூல்களைப் பயிலலாம். திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர் கலிவெண்பா முதலிய நூல்களைப் பாராயணம் செய்யலாம்.

ஆறு நாள்களும், ஆறு காலங்களிலும் ஆறுமுகனுக்குப் பூஜைகள் செய்ய வேண்டும். ஆலயம் சென்று முருகப் பெருமானை வழிபட வேண்டும். ஆறாம் நாளில் முருகனது திருத்தலங்களில் நடைபெறும் சூரசம்ஹாரத்தைத் தரிசிக்கலாம்.

விரதப் பயன்கள்

“”ஒரு நியாயமான குறிக்கோளை முன் வைத்து மஹா சஷ்டி விரதமிருந்தால் அந்தக் குறிக்கோள் தொண்ணூறு நாள்களில் நிறைவேறும்” என்பர்.

சஷ்டி விரத வழிபாடு செய்து முருகனிடம் வேண்டினால், கேட்டதைப் பெறலாம்! கேளாமல் மறந்ததையும் பெறலாம்! கேட்ட அளவைவிடக் கூடுதலாகவும் பெறலாம். எனவே சஷ்டி விரதத்தால் பெறக் கூடிய பயன்களுக்கு ஓர் அளவில்லை.

Thanks You  palakani.com


Leave a Comment